சென்யுமான் மன்ஜா மழலையர் பள்ளி, B40 குடும்பக் குழந்தைகளுக்கான நம்பிக்கை ஒளி
Tadika Senyuman Manja, founded by Latha Raju in 2003, is a small kindergarten in Kapar, Klang, dedicated to providing education to around 50 children from low-income families.

Dated: 13.6.2025 Time: 12.00 pm By: Punithai Chandran
கிள்ளான்,
கப்பாரில் இயங்கிவரும் தாடிகா சென்யுமான் மன்ஜா, (Tadika Senyuman Manja) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் லதா ராஜூவால் நடத்தப்படும் ஒரு சிறிய மழலையர் பள்ளியாகும். இங்கு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சுமார் 50 குழந்தைகளுக்கு கல்விக் கற்று வருகின்றனர். இப்பள்ளியாது யுனிசெஃப் மற்றும் யுஎன் (UNICEF and UN) போன்ற உலக அமைப்புகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
லதா ராஜுவின் தனது கடினமான ஆரம்ப கால அனுபவங்கள், அவரைக் கற்பித்தல் துறைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆரம்பத்தில் ஒரு தோட்டப் பகுதியில் இயங்கிய இந்த மழலையர் பள்ளி, மிகக் குறைந்த கட்டணத்தில் (RM30 தொடங்கி RM100 வரை) தொடங்கியது. இந்த மழலையர் பள்ளியை நடத்துவதற்காக, லதா பகுதிநேர வேலைகளையும், இரவு நேரங்களில் தனிப்பட்ட வகுப்புகளையும், வார இறுதி நாட்களில் வேறு வேலைகளையும் செய்து, தனது வருமானம் முழுவதையும் இதற்காகவே செலவிட்டு வருகிறார். பலமுறை உணவின்றி, மழலையர் பள்ளியிலேயே தங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, மழலையர் பள்ளி கப்பாருக்கு மாற்றப்பட்டது. 2013- இல் யுனிசெஃப் ஆதரவு மற்றும் ஊடக வெளிச்சத்திற்குப் பிறகு, நிலைமை சற்று சீராக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மித்ரா (MITRA) நிதியுதவியையும் பெறத் தொடங்கியுள்ளார்.
தற்போது மூன்று ஆசிரியர்களால் நடத்தப்படும் இந்த மழலையர் பள்ளியில், பெரும்பாலான பாடங்கள் தமிழ் மொழியில் கற்பிக்கப்படுகின்றன. அருகில் இலவச கல்வி வழங்கும் தமிழ்ப் பள்ளிகள் இருந்த போதிலும், இந்த மழலையர் பள்ளி சுமார் 50 குழந்தைகளுடன் வலம் வருகிறது.
லதா, தனது மாஸ்டர் பட்டத்தை (Early Childhood Education) கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்புதான் பெற்றுள்ளார், மேலும் பாடத்திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, வேடிக்கையான மற்றும் விளையாட்டு அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் முறைகளால் பிள்ளைகளுக்கு கற்றுத் தருகிறார்.
MITRA மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், நிதி பற்றாக்குறை இருந்து வருவதாகவும், அதற்குக் காரணம், இப்பள்ளியில் எழுது பொருட்கள் முதல் மின்சாரம், நீர், பராமரிப்பு மற்றும் உணவு என அனைத்து செலவுகளையும், பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது என்றார். மேலும், கூடுதல் புறநடவடிக்கைச் செயல்பாடுகள் மற்றும் போட்டிகளுக்கான செலவுகள் அனைத்தும், பெரும்பாலும் ஆசிரியர்கள் தங்களது சொந்தப் பணத்தில் இருந்தே செலவழித்து வருவதாகத் தெரிவித்தார்.
அண்மையில், சமீபத்தில், மாற்றம் (MAATRAM) அமைப்பின், சுதன் மூக்கியா பதிவிட்ட டிக்டாக் வீடியோ வைரலானதால், பொது மக்களிடமிருந்து ஒரு ஏர் கண்டிஷனர் நன்கொடையாக கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக, சில நாட்களுக்கு முன்பு மழலையர் பள்ளியின் ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் மற்றும் சில பொருட்கள் திருடப்பட்டு விட்டது. இதனால் சிசிடிவி பொருத்துவது அவசியமாகியுள்ளது. ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கும் கனவும் தற்போது நனவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"நான் அதிகமாகவே நிறைய போராடியதால், இந்தத் துறையை விட்டு வெளியேற வேண்டுமென்று பலமுறை எண்ணினேன். ஆனால் குழந்தைகளைப் பார்க்கும்போது, நான் அதிகம் சாதிக்கவில்லை என்றாலும், எனது எஞ்சிய நாட்களை நமது சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்விக் கற்றுக் கொடுப்பதிலேயே, அர்ப்பணிக்க வேண்டுமென்று நானே எனக்குள் சொல்லிக் கொள்வேன். நான் இறக்கும் வரை கற்பித்துக் கொண்டே இருக்கவே விரும்புகிறேன், நான் எங்குச் சென்றாலும், நமது குழந்தைகள் சிறந்த கல்வியைக் கற்க வேண்டும் என்பதே என் இலட்சியம்" என்று லதா கூறினார்.
நன்றி. எஃப்எம்டி