செக்குரிட்டிகள் MyKad-யை கோரவோ ஸ்கேன் செய்யவோ முடியாது-தேசிய பதிவு இலாகா அறிவிப்பு
The National Registration Department (NRD) clarifies that security guards are not authorized to request, hold, or scan public identity cards (MyKad).

Date: 11.5.2025 Time: 10.45 am By: Punithai Chandran
புத்ரா ஜெயா,
பொது மக்களின் அடையாள அட்டையை (MyKad) கோரவோ, வைத்திருக்கவோ அல்லது ஸ்கேன் செய்யவோ பாதுகாப்பு காவலர்களுக்கு (செக்குரிட்டி) அதிகாரம் அல்லது உரிமை இல்லை என்று நேற்று தேசிய பதிவுத் துறை (NRD) அறிவித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு தேசிய பதிவு சட்டம் 7(1)-இன் கீழ், ஐந்து வகைப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படும். அதாவது NRD அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், கடமையில் உள்ள இராணுவ வீரர்கள், அத்துடன் தேசிய பதிவுத் துறையின் தலைமை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பணியாளர்கள் மட்டுமே கோர முடியும் என்று தேசிய பதிவுத்துறை (NRD) பெர்னாமாவுக்கு அளித்த ஓர் அறிக்கையில் விளக்கியுள்ளது.
பாதுகாவலர்கள் MyKad தரவை ஸ்கேன் செய்ய மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதும் அனுமதிக்கப்படக் கூடாது. ஏனெனில் இது தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010- இன் விதிகளுக்கு உட்பட்டது ஆகும். பாதுகாப்பு காவலர்கள் அடையாள அட்டைகளைக் கோருவது மற்றும் வைத்திருப்பது போன்ற எந்தவொரு செயலும் சட்டத்திற்கு எதிரானது மற்றும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்றும் NRD வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக, அங்கீகரிக்கப்படாத எந்தவொரு தனிநபரிடமும் தங்கள் அடையாள அட்டைகளை ஒப்படைக்க வேண்டாம் என்றும், ஏதேனும் மீறல்கள் நடந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் NRD பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில், ஒரு வளாகத்தில் பாதுகாப்பு காவலர் ஒருவர் MyKad-யை ஸ்கேன் செய்ய மின்னணு சாதனத்தைப் பயன்படுத்தியதாக, சமூக ஊடகங்களில் வைரலான பதிவு வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து தேசியப் பதிவு இலாகா விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்பு காவலரின் இந்த நடவடிக்கை அதன் சட்டபூர்வமான தன்மை குறித்து பொதுமக்களுடையே கேள்விகளை எழுப்பப்பட்டுள்ளன என்றும் தேசிய பதிவு இலாகா கூறியது.
நன்றி. மலாய் மெயில்