அனைத்துலக தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில், பத்துமலை தமிழ்ப்பள்ளி சாதனை
Forty students from Batu Caves Tamil School achieved remarkable success at the 36th International Exhibition of Inventions, Innovations & Technology (ITEX - WYiE), held at the KLCC Exhibition Centre
Dated: 4.6.2025 Time: 6.00 pm By: Punithai Chandran
கடந்த மே மாதம் 29-ஆம் தேதி தொடங்கி, 31-ஆம் தேதி வரை தலைநகரில் உள்ள KLCC கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 36-ஆவது அனைத்துலக கண்டுபிடிப்பு புத்தாக்க தொழில்நுட்பக் கண்காட்சியில் (ITEX -WYiE) பத்துமலைத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
பள்ளியின் அறிவியல் பாடக் குழுவின் தலைவி ஆசிரியை சாந்தி அச்சையா மற்றும் அனுபவமிக்க அறிவியல் ஆசிரியர் குழுவினரால் இம்மாணவர்கள் சுமார் மூன்று மாதக் காலங்கள் பயிற்சிகளை மேற்கொண்டு இந்த வெற்றியை அடைந்துள்ளனர். பள்ளியைப் பிரதிநிதித்து மாணவர்கள் எட்டு குழுக்களாக, தங்களின் புத்தாக்க கண்டுப் பிடிப்புகளைக் காட்சிப்படுத்தி, நீதிபதிகளின் கவனத்தை ஈர்த்தனர். அவ்வகையில், புதுமையான முறையில் தங்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்காக இவர்கள் 2 தங்கம் மற்றும் 6 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். இதற்கான பரிசளிப்பு விழா கடந்த மே 31-ஆம் தேதியன்று, KLCC கண்காட்சி மையத்தில் நடைபெற்றது.
பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இப்போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். மாணவர்கள் வெற்றிப் பெற வேண்டும் என்ற வேட்கையில், பள்ளியின் நிர்வாகம் முழுமூச்சுடன் செயல்பட்டு வந்துள்ளது. மாணவர்களின் இந்த உயரிய வெற்றிக்கு, பள்ளியின் அறங்காவலர் டான்ஶ்ரீ டாக்டர் ஆர். நடராஜா, மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் எல்லாக் காலக்கட்டங்களிலும் பக்கபலமாக இருந்து வருவதாக பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சரஸ்வதி த/பெ செங்கல்ராயன் அவர்கள் தெரிவித்ததுடன், இந்த வேளையில் அவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.