“மீண்டும் ஆட்சி அமைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!
“We will form the government again” - Chief Minister M.K. Stalin is confident!
Date: 20 Feb 2026 News By: Bhuvana
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து உரையாற்றினார். அதில், “திராவிட மாடல் அரசால், இந்த 5 ஆண்டுகளில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் குடமுழுக்கு விழா.
குழந்தைகள் முதல் முதியோர் வரை, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள். விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என அனைத்துச் சமுதாயத்தினரும் வாழ்வில் உயர்வு கண்டிட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை நான் எண்ணிப் பார்க்கிறேன். இதற்கெல்லாம் நான் மட்டுமா காரணம்? இல்லை. இல்லவே இல்லை. ஒட்டுமொத்த தமிழர்களும் என் கையோடு கைசேர்த்து, எனக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் வழங்கி, பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பையும், வலிமையையும் தந்து எனக்கு உதவினார்கள்.
நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன். நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக அமரவைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக உழைத்த நான், இலட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன். உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மனநிறைவோடு 5 வருடம் ஆட்சியில் இருந்தோம். அதனால் முழு மன நிறைவடைகிறேன். அதுமட்டுமல்லாமல் மனநிறைவோடு நான் சொல்கிறேன். மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தான் ஆட்சி அமையும். அது உறுதி விரைவில் சந்திப்போம். எதிர்க்கட்சி உறுப்பினர் மட்டுமல்ல மக்களே சொல்கிறார்கள் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும். அதனால் நிச்சயமாக ஆட்சிக்கு வருவோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
www.myvelicham.com / www.myvelichamtv.com



ganapathy







\
