துப்பாக்கிச் சூட்டால் ஒருவர் பலி

One killed in shooting

துப்பாக்கிச் சூட்டால் ஒருவர் பலி

ஷா ஆலம், 19May 2023 

கோலா லங்காட், சுங்கை ஜெரோம் காவல் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சம்பவத்தில் தலையில் நான்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக கூறி, இரவு 11.30 மணியளவில் காவல்துறை தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து தனது தரப்புக்குப் புகார் கிடைத்தது என்று கோலா லங்காட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அஹ்மத் ரித்வான் முகமது நார் @ சலே தெரிவித்தார்.

“சுங்கை ஜெரோம் காவல் நிலையப் பகுதியில் பணியில் இருந்த புகார்தாரர், அங்கு பலத்த வெடிச் சத்தம் கேட்டு நேராக சம்பவ இடத்திற்கு சென்றார்.

“அங்கு ஒரு உள்ளூர் நபர் கடுமையான காயத்துடன் சாலையில் கிடப்பதைக் கண்டார்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தெலோக் பங்லிமா காராங் சுகாதாரக் கிளினிக், பாதிக்கப்பட்டவர் தலையில் ஏற்பட்ட காயம்  காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்தார் என்பதை உறுதிப்படுத்தியது. மேலும் தடயவியல் பிரிவு சம்பவ இடத்தைச் சுற்றி ஐந்து தோட்டா உறைகளைக் கண்டெடுத்தது என அவர் கூறினார்.

காவல்துறையின் விசாரணையில், இறந்த 39 வயதான நபருக்கு 13 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் கூறினார்.

சந்தேக நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர்

தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த நபர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு அல்லது கோலா லங்காட் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 03-31872222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.